Tuesday 24 April 2012

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது.

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். ” மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் “பயோகேஸ்” அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.

எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.

இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் “பயோகேஸ்” பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.

எரிவாயு கலன் அமைப்பு

இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும்.

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.

மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.
எங்கெல்லாம் அமைக்க முடியும்?

அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும்.

இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.

இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது.

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்” என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment